இலங்கையில் முன்பள்ளிக் கல்வியானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது .நமது நாட்டிலுள்ள முன்பள்ளிகள் கல்வியியல்,சமூகவியல், உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் .


 


 

 

செல்வராஜ் வினோதராணி,
இரண்டாம் வருடம்
கல்வியியல் சிறப்புக்கற்கை,
பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.


 

கல்வி என்பது முறை வழிப்படுத்தப்பட்ட நிலையில் முனைப்பாக செயல்படக்கூடிய சரியான வயது எல்லைக்குள் வழங்கப்படவேண்டியதொரு நுண்மதி நிலையாகும். கல்வியானது உரிய முறையில் அளிக்கப்படுமானால் சிறந்ததொரு பயனைப் பெற்றுக்கொள்வதோடு வாழ் நாள் நீடித்த கல்விக்கு அவர்களை வழிநடத்திச் செல்லும். அந்த வகையில் ஆரம்பக் காலம் முதல் இன்று வரை குழந்தைகளின் உடல், உள, சமூகவியல் ரீதியான வளர்ச்சிப் பரிணாமங்களில் முன்பள்ளிகள் முக்கிய பங்காற்றுவதுடன் தேசிய, சர்வதேச ரீதியிலும் இதன் தேவை இன்றியமையாததாகவும் காணப்படுகின்றது.

எப்பாடத்தினையும் எப்பருவநிலையிலையிலும் கற்கலாம் என்பது சமகாலக்கல்வி இது உலக மெய்வல்லுனர்கள் கண்ட முடிவு. இதிலிருந்து உருவாகும் கருத்து உலகில் வாழும் ஒவ்வொரு குழந்தையும் ஏற்ற சந்தர்ப்பமும் அத்தோடு அவனுக்கு தகுந்த சூழ்நிலையும் உருவாக்கி அளிக்கப்பட்டால் அவன் கற்கும் ஆற்றல் மேம்படும் என்பதாகும். இதற்கு முன்பள்ளிக் கல்வி அடித்தளமாக இருப்பதோடு, ஆதார அடிப்படைக் கல்வியையும் அளிக்கின்றது.

நமது நாட்டு 1981ம் ஆண்டின் அரசுக்கல்வி சீர்த்திருந்த முன்மொழிவுகளைப் பரிசீலித்தோமானால் முன்பள்ளி நிலைக்கல்வித் தத்துவத்தையொட்டி இம்முன்மொழிகள் சிறிதளவேனும் சிந்திக்கவில்லை என்றே கொள்ள வேண்டும். விதப்புரை கூறுகின்ற 1981ஆம் ஆண்டின் கல்வி வெள்ளையறிக்கை இலங்கையில் பள்ளிக்கூட அனுமதி வயது ஐந்தாக இருப்பதால் முன்பள்ளி கல்வி முக்கியமல்ல எனும் கருத்தை தருகிறது.

அதுமட்டுமல்லாது இந்நாட்டில் தனியார் துறைக்கல்வி நிறுவனங்கள் பயன் மிக்க பணிகளை நகர்புறங்களில் வழங்குகின்றன. எனவும் கூறி பொதுசன சேவை நிலையங்களுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும் இக்கல்வி நிலை உயர அரசு ஊக்கம் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.இது முன்பள்ளிக் கல்வியில் அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது.

கல்வியில் சமத்துவம், கல்வியில் சமசந்தர்ப்பம், அனைவருக்கும் கல்வி என்பது தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கங்கள் ஆகும். இதனை ஏற்கும் நாம் இம் முக்கியமான ஆரம்ப அடிப்படைக் கல்வியினை தனியார் துறையிடம் ஒப்படைக்க முடியாது. இந்நிலைக் கல்வியிலும் தனியார் துறைத் தத்துவம் ஏற்றுக்கொள்ளப்படுமேயாகில் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை, என்பதோடு கல்வியானது சமூக, உளவியல் ரீதியான மனித அநீதியான விடயம் என்றே கொள்ளல் வேண்டும்.

முன்பள்ளிக் கல்வி என்பது குழந்தைகளின் அல்லது தனியாளின் திறமைக்கான ஆரம்பமாகவும், ஆளுமைமிக்கவராக ஒவ்வொருவரையும் விருத்தி செய்யும் கல்வி முறையுமாகும். இத்தகைய கல்வி காலசூழலுக்கு ஏற்பவும், தொழிநுட்ப உலகின் மாறுதல்களுக்கு ஈடு கொடுக்கும் விதத்திலும் கற்பிக்கப்படும் பொழுது சிறந்த மனப்பான்மையும், அதனுடன் கூடிய மனப்பாங்குகளும் மேன்மை கொள்ளும் என்பது உண்மையாகும்.

முன்பள்ளி நிலைக்கல்வி குழந்தைகளுக்கு முதல் நிலைக்கல்வி அதாவது 6, 7 வயதில் தொடங்கும் கல்வி நிலைக்கு முன்னர் அளிக்கப்படும் கல்வியாகும். இந்நிலைக்கல்வி ஒரு சமுதாயத்தின் முக்கிய தத்துவ உளவியற் கல்வி அம்சம் என்றே கொள்ளுதல் வேண்டும். விசேடமாக வளர்முக நாடுகளில் பொருளாதார, சமுதாய அடிப்படையில் ஏற்றத்தாழ்வு, பண்பாட்டு, கலாசார அடிப்படையில் தாரதம்மியம் ஆகியன காணப்படுகின்றன. வாழ்க்கை வசதிகளில்லாது அநேகமான மக்கள் வாழும் இந்நாடுகளில் முன்பள்ளிக் கல்வி முக்கிய இடம்பெறுதல் வேண்டும்.

குழந்தைகளே வருங்கால சமூகம், சமுதாய சிற்பிகள், அவர்களது வருங்கால வளர்ச்சியிலும,; ஆளுமை வளர்ச்சியிலும் அவர்களது குழந்தைமையிலும் அவர்கள் பெறுகின்ற அனுசரனையே அனுபவமே பிற்காலத்தில் பொலிவு பெற்றுத் தொனிக்கும். ஆனால் உலகின் பல நாடுகளின் இவ்வித திட்டத்தை ஆராய்வோமானால் கல்வித்திட்டங்களுக்கும் முன்பள்ளிக்கல்விக்கும் தொடர்பு இல்லாதது போல் தெரிகின்றது.

ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டுக் கழகம் தொடர்ந்த சிந்தனை சீரமைப்பு என்ற உணர்வுகளுடன் உலகம் வேண்டி நிற்கும் கல்விஉத்திகளுக்கான குறிப்புக்களையும் தீர்மானங்களையும் அறிவித்துள்ளது.1980 ஆம் ஆண்டின் கல்வி உத்திகளின் பிரதான குறிக்கோள்களுள் பள்ளிச் செல்லும் வயதிற்கு முன்நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சி முக்கிய இடம்பெற வேண்டும் என இக்கழகம் பரிந்துரைக்கின்றது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரேசில் சீனா, இந்தியா, ஜமைக்கா, மெக்ஸிகோ, சோவியத் குடியரசு, ஆகியவற்றில் கல்வி நோக்கங்களை எளிதில் அடைவதற்காக முன்பள்ளி கல்வி நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் முன்பள்ளி குழந்தைகளை கருதி ஆக்கப்பட்ட கல்வி திட்டத்தில் செனிகல் நாடு மிகச் சிறந்த இடம் பெறுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்க மக்கள் குழந்தை வள்ர்ச்சி பற்றி ஆராய்வதற்கு திடசங்கற்பம் பூண்டனர். இதனடிப்படையில் அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகளில் குழந்தைகளின் மிக முக்கியமான பருவம் முன்பள்ளி பருவமே என்பதை உணர்த்தினர். இதில் மழலைகளின் உடல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை மிக வேகமாக வளர்ச்சி பெறுகின்றன என்பது ஆய்வுகளின் பெறுபேறுகளாகும். மேற்குறித்த விடயங்களை வைத்து முன்பள்ளியின் முக்கியத்தவத்தையும், உலகளாவிய ரீதியில் வியாபித்து உள்ள தன்மையையும் எம்மால் அறிய முடிகிறது.

அந்த வகையிலே முன்பள்ளிக் கல்வித் தொடர்பான தற்கால போக்கினை நமது நாட்டினை மையப்படுத்தி நோக்கும் பொழுது இலங்கையின் முன்பள்ளிகள் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னரே தோற்றம் பெற்றன. 1943 ஆம் ஆண்டு கன்னங்கரா அறிக்கை, 1963 ஆம் ஆண்டு ஜயசூரிய ஆணைக்குழு அறிக்கை, 1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன் ஆரம்பக்கல்வி அறிக்கை முன்பள்ளிகள் தொடர்பான அவசியத்தை உணர்த்தின எனலாம்.அதன் பின் காளான்கள போல் ஆங்காங்கே முன்பள்ளிகள் தோற்றம் பெற்றதோடு, இன்று நாடு முழுவதும் பல முன்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இவ்வாறிருப்பினும் நமது நாட்டிலுள்ள முன்பள்ளிகள் கல்வியியல்,சமூகவியல், உளவியல் அடிப்படையில் அமைக்கப்படவில்லை, சமய அடிப்படையிலெழுந்த தனியார் நிறுவனங்களாலும், பயிற்றப்படாத நிறுவனங்களினாலும் முன்பள்ளிகள் பெரும்பாலும் நடாத்தப்படுகின்றன. இவை நாடு முழுவதிலுமே 10,000 குழந்தைகளுக்குக் கூடவில்லாது, நூறிற்கும் குறைந்த நிலையங்களில் மாத்திரமே இவ்வித கல்வி அளிக்கப்படுகின்றது. இவைக்கூட நகர்புறச் செல்வந்தக் குழந்தைகளுக்கே பயன்படுகின்றன. மேலும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முன்பள்ளிகள் அரசாங்கத்தின் மேற்பார்வையில் செயற்படுகின்றன. என்பதோடு மலையக பகுதியில் உள்ள முன்பள்ளிகள் சில ட்ரஸ்ட் மூலமாகவும் வழிநடாத்திச் செல்லப்படுகின்றது.

இவ்வகையில் இலங்கையில் முன்பள்ளிக் கல்வியானது பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது. இருப்பினும் இதில் அநேகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் என்பதையறிந்தும் இதற்கான பதில்கள் இன்றும் கிடைக்கப்பெறாத நிலையே காணப்படுகின்றது. அவ்வகையிலே முன்பள்ளிக் கல்விப் பிரச்சினைகளாக சில விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.முறைப்படுத்தப்பட்ட நோக்கங்களை உடைய கலைத்திட்ட சீராக்கங்கள், கொள்கைகள் இன்மை, முன்பள்ளிகள் அரசின் கண்காணிப்பிற்கு உட்படாமை, தகுதியுடைய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை, ஆசிரியர்களின் வேதனங்கள் குறைவாக இருத்தல்,போதியளவு வளங்கள் இன்மை(குறிப்பாக மலையகப் பகுதிகள், மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் காலத்திற்குக் காலம் வழங்கப்படாமை, கற்பித்தல் மொழி தாய்மொழியன்றிருத்தல்(நகரப் புற தமிழ் மொழி மூல சிறார்களுக்கு கூடுதலாக சிங்களம், ஆங்கில மொழிகளில் கற்பிக்கப்படுகின்றமை), உரிய மொழியில் பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமித்தல், பிள்ளையின் அறிவு, ஆற்றலுக்கு அப்பாற்பட்டு கல்வி முறைகள் செயற்பாடுகள் தற்காலத்தில் அவர்களுக்கு புகுத்தப்படுகின்றன. 


இச்செயற்பாடானது பிள்ளையினை மனரீதியான பாதிப்பிற்கு இட்டுச் செல்வதோடு இயற்கையோடு இயைந்து செயலாற்றும் தன்மை அற்றுப் போகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும்.

எனவே முன்பள்ளி கல்வி குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, நல்லபழக்க வழக்கங்களை வளர்த்து அவர்களின் குறிக்கோள்களை அறிந்து, முழுவளர்ச்சியையும் ஊக்குவித்தல் வேண்டும். இதற்கான நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் விடலைப் பருவத்தை எய்தும் வேளையில் எல்லாத்துறைகளிலும் சிறந்த ஆளுமையுடையவர்களாக திகழ்வர் என்பது கண்கூடு.