சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார் .

 

 


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து கஹதுட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மூன்று குழந்தைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டின் குறைபாடுகளை நிறைவேற்றுவது உட்பட பல கனவுகளுடன் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

சாரங்கா அங்கிருந்த ஒவ்வொரு நாளிலும் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு செய்தியையும் அனுபவங்களையும் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க மறக்கவில்லை.



இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிவிடுவதாக தனது கணவரிடம் கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.


இருப்பினும், குறிப்பிட்டவாறு அவர் வருகை தராததைத் தொடர்ந்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா இரண்டு பயணப் பைகளுடன் வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.


இதையடுத்து, விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, சாரதியை விசாரணைக்காக அழைத்தனர். விசாரணையின் போது, சாரங்கா உதேஷிகா தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றதாக தெரிவித்தார்.


இருப்பினும், தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் சாரங்காவின் கணவர் சென்று நடத்திய சோதனையின் போது எந்வொரு பெண்ணும் இங்கு வரவில்லை என்று சம்பந்தப்பட்ட வீட்டு குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக அவரது கணவர் குறிப்பிட்டார்.


சம்பவம் தொடர்பில் கஹதுட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.