மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல
கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை
செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை
அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று
(24) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை
நேற்று பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள்
முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது, உணவகத்தில்
மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்ததை கண்டுபிடித்து அந்த
உணவக உரிமையாளரை கைது செய்தனர்.
இதனையடுத்து, குறித்த உணவக
உரிமையாளரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து
அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக
செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, கிழக்கு
பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள
இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு
கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக
செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.