மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த DNA பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச இன்று உத்தரவிட்டுள்ளார்.
தமது சிசு தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை செய்யுமாறு பெற்றோர்கள் கோரியபோது, வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.
மேலும் , சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
மதுஷானி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட தினமே குழந்தையை பிரசவித்திருந்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலை அதிகாரிகள் சிசுவின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருந்ததும், மற்றும் இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், பெற்றோர் டி.என்.ஏ பரிசோதனைக்கு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





