ஐக்கிய கிராம உத்தியோகதர் சங்கத்தின் 55வது வருடாந்த மாநாடு விழாவானது ஐக்கிய கிராம உத்தியோகதர் சங்கத்தின் தலைவர் மு.கோமலேஸ்வரன் தலைமையில் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் இன்று (29) இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் 345 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து வாக்கெடுப்பு மூலம் ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நிகழ்வு, மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சுபியானின் மேற்பார்வையில் இடம் பெற்றது.
இவ் வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டவர்கள் இரு வருடத்திற்கு தமது சேவையை வழங்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்றுச் சென்ற கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துப்பாடி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவ மாணவிகள் அதிதிகளினால் கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்களான திருமதி ரீ.தட்சனகெளரி ( மண்முனைப்பற்று), திருமதி என்.சத்தியானந்தி (மண்முனை மேற்கு), யு.உதயஶ்ரீதர் (காத்தான்குடி ), திருமதி. நிகாரா மஃவஜூத் (ஏறாவூர் நகர்), எஸ். சுதாகர்( பட்டிப்பளை), மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

























