பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றிய இருவர் கைது .

 


மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு  விளக்கேற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு. மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் மற்றும் கொடிகளை வாகனத்தில் எடுத்துச் சென்றவர்கள் உட்பட 3 பேரை நேற்று (27) மாலை 6.10 க்கு கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிப்பதற்காக மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் பொருட்களை இன்று மாலை எடுத்துச் சென்ற நிலையில்  அந்த பகுதியில் நடமாடும்  வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது,

அங்கு  சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், கம்பிகள் இருப்பதை கண்டு வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியேர் பொலிஸ் நிலையம் சென்று கைது செய்யப்பட்ட சாரதியை பார்த்துவிட்டு 6.5 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியில் மாவீரர்களுக்கு விளக்கேற்றயதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது  தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.