சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஒரு சிலரது டுவிட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்த தகவலின்படி இது முடக்கப்பட்டுள்ளமை அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: ‘டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்துவதற்கு முதலில் குரல் கொடுத்தது நாங்கள் தான், எனவே தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு பதக்கம் வாங்கி கொடுத்த வீராங்கனைகளை தெருவில் நிற்க வைத்தது குறித்து கேள்வி கேட்டதற்காக தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

டுவிட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம் தான் ஆனால் என்னுடைய குரலை யாராலும் முடக்க முடியாது ’ என்று தெரிவித்திருந்தார். 

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் முக.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!’ என்று தெரிவித்துள்ளார்.