துளசி மாடமும் வழிபாட்டு முறையும்.





உங்களுடைய வீட்டில்,
 தொட்டியில், தரைப்பகுதியில், துளசிச் செடியை அமைப்பதை விட, துளசிமாடம் வைத்து, அதன் மேல் துளசி செடியை வைப்பது தான் மிகவும் சிறந்தது.

 ஒருவருடைய வீட்டில் துளசி செடி வடகிழக்கு மூலையில் இருப்பது மிகவும் நல்லது.

துளசிச் செடியை, வழிபடுபவர்கள் கட்டாயம் மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபட வேண்டும். இந்த துளசி செடியோடு மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபட வேண்டும் என்றால், சங்கு சக்கரம் இவை இரண்டையும் சேர்த்து வழிபடுவது அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும்.

●. வீட்டில் துளசி மாடத்தை பிரதிஷ்டை செய்யும்போது,

 முதலில் சங்கை வைத்து விட்டு, அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி, தண்ணீர் தெளித்து, மூன்று துளசிச் செடிகளை ஒன்றாக நட்டு, துளசி மாடத்தை அமைக்க வேண்டும்.

●. வீட்டில் துளசி மாடம் இருந்தால்,

 தினம்தோறும் அதற்கு பூஜை செய்ய வேண்டியது அவசியம். அதாவது துளசி மாடத்தை சுற்றி சுத்தம் செய்துவிட்டு, அரிசி மாவால் கோலம் போட்டு, ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு பழமோ, அல்லது கற்கண்டையோ நெய்வேதியமாக வைத்து, பூஜை செய்ய வேண்டும்.
துளசி மாடம், காலை மாலை இரண்டு வேளையிலும் தீபமேற்ற படாமல் இருக்கவே கூடாது. இதேபோல் துளசி வழிபாட்டை காலை சூரிய உதயத்திற்கு முன்பு செய்வது மிகவும் நல்லது.
அதாவது காலை 6 மணிக்கு முன்பாக துளசி மாடத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ‌துளசிச் செடிக்கு இனிப்பு பண்டங்களை நிவேதனமாக வைத்தால், சுக்கிர யோகத்தையும் அடைய முடியும்.

துளசி செடியை கட்டாயம், தினம்தோறும் 9 முறை வலம் வர வேண்டியது அவசியமானது. உங்களால் முடியும் என்றால் 27 முறையும் வலம் வரலாம்.