சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இந்நிகழ்வு இன்று உத்தியோக பூர்வமாக நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் களுத்துறை தெற்கு நல்வாழ்வு மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று முற்பகல் நடைபெறுகிறது. இதற்குச்
சமகாலத்தில் மாவட்ட மட்டங்களிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்புச் சிகிச்சைக்கும் முன்னுரிமையளித்து, ஆரம்ப சுகாதார சேவையில் ஒரு புதிய திருப்பத்தை இத்திட்டம் ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய வைத்தியசாலைகள் கட்டமைப்பில் நோயாளி ஒருவர் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது ஏற்படும் நெரிசல் மற்றும் வரிசைகள் காரணமாக, நோயாளியின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி ஆலோசனை வழங்குவதற்கு மருத்துவர்களுக்கு கிடைக்கும் நேரம் வரம்பிற்குட்பட்டதாக காணப்படுகிறது.அத்துடன், பொதுமக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் போதுமான நேரத்தைச் செலவிட்டு கலந்துரையாடுவதற்கோ அல்லது தடுப்புச் சுகாதார முறைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கோ சந்தர்ப்பம் கிடைக்காமையும் பிரச்சினையாகிறது.
இந்தச் நிலைமையைக் கருத்திற் கொண்டு, பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் சமூக மட்டத்தில் சுகாதார ஆலோசனைகள், பரிசோதனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் ‘ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள்’ என்ற கருத்திட்டத்தை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த மையங்கள் வழக்கமான மருந்தகம் அல்லது வெளிநோயாளர் பிரிவுக்கு மட்டும் வரையறுக்கப்படாது.நோயுற்ற பின்னர் சிகிச்சையளிப்பதை விட, நோய்கள் ஏற்படுவதை முன்னரே தடுப்பதும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.
ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு மருத்துவர் தாதியர் குழு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





