அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசியத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு அவர்களின் முன்மொழிவுக்கு அமைவாக, பொது நிர்வாக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட இந்த நிதியின் கீழ், ஏறாவூர்ப்பற்று, மண்முனை தென்மேற்கு மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச சபைகளில் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், வந்தாறுமூலையில் நான்கு கடைத்தொகுதிகள் மற்றும் வரவேற்பு மண்டபம் அடங்கிய இரண்டு மாடிக் கட்டிடம் அமைத்தல், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மண்முனைப் பாலத்திற்கு அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொழுதுபோக்குப் படகுச் சேவையை ஆரம்பித்தல், மற்றும் வவுணதீவு பகுதியில் மீன் சந்தைக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணித்தல் ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (14) இடம்பெற்றது.
இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன், மக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.





