இலங்கையில் ஆடி அமாவாசை விரதம் நாளை (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமாவாசை தினம் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் முக்கியமான நாளாகக் கருதப்படும் நிலையில், அதிலும் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும் நோக்கில் தர்ப்பணம், படையல் உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்வதுடன், காகம் மற்றும் பசுவுக்கு உணவளிப்பது போன்ற பாரம்பரிய நடைமுறைகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் வழங்க முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே எள் மற்றும் தண்ணீரை வைத்து எளிமையான முறையில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பயன்பாட்டில் உள்ள வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டிலும் நாளை (ஆகஸ்ட் 12) ஆடி அமாவாசை தினமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் சூரிய கிரகணம் இடம்பெற்றாலும், அது இலங்கையில் தோற்றமளிக்காது என்பதால், இலங்கையில் நாளையே ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தோற்றமளிப்பதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன் மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் மறுநாளான வியாழக்கிழமை (13) கடைப்பிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பகுதியில் தோற்றமளிக்கும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆடி அமாவாசை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருவதால், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் ஆடி அமாவாசை தீர்த்தம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கையில் நாளை (12) ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்குமாறு இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் “சிவாகமகலாநிதி” சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.





