நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகப்படியான சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஹசந்தி ஜெயலத் இது குறித்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 35,000 தோல் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாவதுடன், கிட்டத்தட்ட 15,000 உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தினமும் சராசரியாக 100 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது நோயின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


சூரிய ஒளி மிகத் தீவிரமாக இருக்கும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க குறைந்தது SPF 30 கொண்ட சூரிய பாதுகாப்பு களிம்புகளை (Sunscreen) பயன்படுத்துவது அவசியம்.

வெளியில் செல்லும் போது தொப்பிகள் மற்றும் தோலை முழுமையாக மூடியிருக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தோலை வெண்மையாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சில களிம்புகள் (cream) தொடர்பில் வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய தயாரிப்புகளில் ஹைட்ரோகுவினோன், பாதரசம் மற்றும் ஸ்டெராய்டுகள் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளது.


குறிப்பாக ஸ்டெராய்டுகள் தோலின் தடிமனைக் குறைத்து, அதன் இயற்கையான பாதுகாப்புத் திறனை வலுவிழக்கச் செய்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் விளக்கினார்.

தோல் புற்றுநோய்களில் 'மெலனோமா' (Melanoma) வகை மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இது மிக வேகமாக உடல் முழுவதும் பரவக்கூடியது என்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியமாகும்.

தீவிர சூரிய ஒளி நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அதிகாரிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.