உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 200
மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக அரசாங்கம்
வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக சில அங்கீகரிக்கப்படாத தனியார்
நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மாணவர்களையும் பெற்றோர்களையும் தவறாக
வழிநடத்துவதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2025
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, க.பொ.த (உயர் தர)
பரீட்சையில் அதிவிசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சர்வதேச
ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப்
பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்தை இலங்கை அரசாங்கம்
அறிமுகப்படுத்தியுள்ளது.
க.பொ.த (உயர் தர) பரீட்சையில் மிகச் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்ற முதல் 200 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்படுவர்.
இத்திட்டம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் மாத்திரமே
நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.





