மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.
பிரஜாசக்தி செயற்திட்டத்தின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக மாவட்டத்தில் விவசாயிகளினால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதற்கான இயந்திரம் இன்மையினால் விளைபொருட்களை சேமித்து வைக்க முடியாது குறைந்த விலையில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்தனர்.
இதனை நிவர்த்தி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பலனாக நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாகரை, மண்முனை மேற்கு, போரதீவு பற்று, ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று, போன்ற பிரதேசங்களில் நிறுவுவதற்கான பொருத்தமான இடம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
மேலும் பிரஜாசத்தி செயற்திட்டத்தினூடாக மேற்கொள்ளவுள்ள செயற்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் கலாநிதி கே.பிரேமகுமார், திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உற்பத்தி பொருளாதாரம், உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





