மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்துக்குள் ஊடுருவிய காட்டு யானை, அங்கிருந்த பல வீடுகளைச் சேதப்படுத்தியதுடன் மக்களையும் கடுமையாகத் தாக்கியிருந்தது.
இந்தத் தாக்குதலின் போது சம்பவ இடத்திலேயே ஒரு முதியவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
யானை தாக்குதலில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ளமை முனைக்காடு கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு, கிராமத்துக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க நிரந்தரமான வேலி அல்லது பாதுகாப்புப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





