தாதி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காதலன் விளக்கமறியலில் .

 


அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரு பிள்ளையின் தாயான தாதி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது காதலனை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அரநாயக்க, நிக்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் 33 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அரநாயக்க வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற தாதியே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது,

உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து, ஏழு வயதுடைய மகனுடன் தீப்பிட்டிய பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதன்போது, சந்தேகநபருடன் அவர் தகாத உறவைப் பேணி வந்தார் என்று கூறப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய தாதி, சந்தேகநபர் தனது வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து, உடனடியாக அருகிலுள்ள வீட்டுக்குத் தப்பியோடியுள்ளார்.

அவரைத் துரத்திச் சென்ற சந்தேகநபர், அண்டை வீட்டு வாசலில் வைத்து அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். தர்க்கம் முற்றிய நிலையில், சந்தேகநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாதியின் நெஞ்சுப் பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபர் அன்றிரவே கைது செய்யப்பட்டார்.

நேற்று திங்கட்கிழமை மதியம் மாவனல்லை பதில் நீதிவான் நிஷேதா குமாரி கருணாதிலக்க சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.