கடும் கடற்கொந்தளிப்பால், ஒரு கிராமமே அழியும் நிலை உள்ளது.

 

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட
கடும் கடற்கொந்தளிப்பால், பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரை மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, நடைபாதை, கொங்கிறீட் வீதி மற்றும் சிமெந்து இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து நிரந்தர கட்டுமானங்களும் கடல் அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டு முற்றாக அழிவடைந்துள்ளன.

கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மணல் அரிப்பு காரணமாக, கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஊடுருவும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடரும் பட்சத்தில் அத்தீவுப் பகுதியிலுள்ள ஒரு கிராமமே அழியும் நிலை உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விபத்துகளைத் தவிர்க்க அபாயகரமான வீதிகளில் கற்களைக் கொண்டு, தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மின் கசிவைத் தவிர்க்க சிறுவர் பூங்காவிற்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைக்கவும், கடல் நீர் ஊருக்குள் புகுவதைத் தடுக்கவும் நிரந்தர தீர்வை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.