கொழும்பு IDH மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஷானிகா சமரபால என்ற 37 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தரமற்ற மருந்துகளை வழங்கியதால் இந்த மரணம் ஏற்பட்டதாக அவரது கணவர் நேற்று அதுருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவரான ஹோமாகம, ஹபரகடாவை சேர்ந்த பசானக மதுசங்க, என்பவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்காக தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மருந்து வழங்கப்பட்ட உடனேயே தனது மனைவியின் இதயம் நின்றுவிட்டது. அவரது இதயம் சுமார் ஆறு முறை பாதிக்கப்பட்டது.
சிகிச்சை அளிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நான் என்ன செய்தாலும், இப்போது எனக்கு மனைவி இல்லை. என் பிள்ளைகளுக்கு அம்மா இல்லை. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கணவர் குறிப்பிட்டுள்ளார்.





