
மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இருவேறு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) மாலைவேளை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் கிரான் பிரதான வீதியை சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞன் உயிரிழந்தார். இதனையடுத்து கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேவேளை சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 16 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் சம்பவ தினமான நேற்று மாலை 5.00 மணியளவில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மின் கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 14, மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அந்தந்த காவல் நிலைய போக்குவரத்து காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




