கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட புதுக்கவிதை ஆக்கப்பிரிவில் திறந்த போட்டியில் மாகாண மட்டத்தில் திரு ம.புவிதரன் அவர்களின் கவிதை ஆக்கமானது முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டமைக்கான நினைவுப் பரிசும் பாராட்டு சான்றிதழும் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி .மேனகா புவிக்குமார் அவர்களினால் சத்துருக்கொண்டான் சர்வோதய ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
வாய்மொழி கவிஞர் கணபதி பிள்ளையின் மகனான செட்டியூர் சிந்தனை செல்வன், பல்துறை ஆளுமையாளருமான அதிபர் மயில்வாகனம் அவர்களின் மகனாகிய இவர் "செட்டியூர் சிந்தனைப் பித்தன்" எனும் புனை பெயரில் எழுத்து இலக்கிய வெளியில் இனம் காணப்படுகின்றார். கவிஞராகவும், பாடல் ஆசிரியராகவும் இலக்கிய துறையில் ஆர்வம் கொண்ட இவர் பாடசாலை காலங்களில் பல்வேறு வகையான கலைநிகழ்வில் பங்கெடுத்தவராவார். அக்காலங்களில் பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய தேசிய சாகித்திய விழாவில் இவரது சிறுகதை படைப்பு முதலிடத்தினை பெற்றுக் கொண்டதோடு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் மாணவர் ஒன்றிய உறுப்பினராக இருந்து பல்கலைக்கழகம் மட்டத்தில் இலக்கிய வெளியீடுகளில் பங்களிப்பு செய்ததுடன், இவற்றுள் "நினைவுச் சுவடுகள்" எனும் தனிநபர் கவிதை விமர்சண நூலாக்கம் குறிப்பிடத்தக்கது.
மேலும் மொட்டுக்கள், விழி, குருத்தோலை, ஆனந்தகிரி முதலான ஒன்பதுக்கு மேற்பட்ட சிறப்பிதழ்களின் இதழ் ஆசிரியராகவும், இணை ஆசிரியராகவும் செயற்பட்டுள்ளதோடு, பல்வேறு வகையான ஆய்வு நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகளை வழங்கியுள்ளார். செட்டிபாளையம் கிராமத்தில் முதன் முதலாக "பேசும் படங்கள்" எனும் முற்று முழுதான புகைப்படங்கள் கொண்ட சிறப்பிதழை 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் மூலம் வெளியீடு செய்தவரென்பது குறிப்பிடத்தக்கது. செட்டிபாளையம் செய்திகள் எனும் பெயரில் முகநூல் பக்கத்தின் ஊடாக பிரதேச செய்திகளை பதிவிட்டு ஊடகப் பணியினையும் மேற்கொண்டு வருகின்றார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையின் உறுப்பினராகவும், சிவன் ஆலயம், திருவருள் நுண்கலை மன்றம், திருவருள் கல்வி அபிவிருத்திச் சபை, சமூக மேம்பாட்டு அமைப்பு முதலான வலிந்துதவு சங்கங்களின் செயலாளராகவும் செயற்பட்டு கலை பண்பாட்டம்சங்களை மரபழியாது பேணிப் பாதுகாப்பதில் அயராது பங்களிப்புச் செய்து வருகின்றார்.
இந்நிகழ்வில் கலை இலக்கிய படைப்புக்களில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய கலைஞர்கள், கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

.jpeg)





