பயணச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டு இல்லாமல் விமானத்தில் பறக்க முற்பட்ட பயணி அதிரடியாக கைது .

 


லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான பயணச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டின்றி விமானத்தில் பயணி ஒருவர் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
 
நோர்வேயின் ஒஸ்லோவிற்கு பயணமான பிரிட்டிஷ் எயார்லைன்ஸ் விமானத்தில் பெயர் குறிப்பிடப்படாத குறித்த பயணி ஏறியுள்ளார். 
 
விமானத்தில் பயணிக்கவிருந்த பிற பயணிகளைப் பின்தொடர்ந்து சென்ற அவர், பாதுகாப்பு சோதனை நடைமுறைகளையும் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் வேறொரு பயணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர் அமர்ந்திருந்தமையால், விமானப் பணிப்பெண்கள் அந்த நபரைக் கண்டறிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
தொடர்ந்து விமான ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். 
 
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாகவும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.