சமீபத்திய அனர்த்தங்களினால்
பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாகப் பிரதமர் ஹரிணி
அமரசூரிய மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய
கலந்துரையாடல் ஒன்று நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக்
கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவரவும், மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பிரதமர் இதன்போது
விளக்கினார்.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில்
பாடசாலைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என சுட்டிக்காட்டிய பிரதமர்,
அறிவியல் ரீதியான மதிப்பீடுகளின் அடிப்படையில் அத்தகைய பாடசாலைகளைப்
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத்
தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், உள்கட்டமைப்பை மீட்டெடுப்பது,
சில பாடசாலைகளை இணைத்துக் கூட்டாக இயக்குதல், கற்பித்தல் மற்றும் கற்றலை
ஆதரிக்க டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துதல் மற்றும்
சிறப்பு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசாங்கம்
கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.





