மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 2025 டிசம்பர் 14ஆந் திகதி வரையும் 40 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாரம் வரை டெங்கு தாக்கத்தினால் அதிகளவு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் பாதிப்புக்குள்ளானதுடன் வவுனதீவு பிரதேசத்தி 5 பேரும், காத்தான்குடி மற்றும் செங்கலடி பிரதேசங்களில் தலா 4 பேரும், கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களில் தலா 3 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் களுவாஞ்சிக்குடி, கிரான், வாகரை, வெல்லாவெளி மற்றும் ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவரும் ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருமாக மொத்தம் 40பேர் டெங்கு நோயாளர்களான அடையாங்காணப்பட்டுள்ளனர்.
இதுதவிர பட்டிப்பளை மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
இருப்பினும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தவபாலசூப்பிரமணியம் சரவணன் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். கடந்த மாதம் 85 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுமுள்ள மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியிருக்கும் குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





