இஸ்ரேல் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், வீட்டு பராமரிப்புத் துறையில் பணிகளை மேற்கொள்ள 29 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கொண்ட புதிய குழு ஜூலை 7 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்குப் பயணிக்கவுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளை அதிகாரபூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று ( 4) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, மொத்தம் 379 இலங்கை பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது இஸ்ரேலின் வீட்டு பராமரிப்புத் துறையில் பயிற்சி பெற்ற இலங்கை பராமரிப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்குகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் படி, இன்றுவரை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2,269 இலங்கையர்கள் இஸ்ரேலின் பராமரிப்புத் துறையில் இணைக்கப்பட்டு பணிபுரிகின்றனர்.