மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வும், பிரதேச சிறுவர் சபை அங்குரார்பணமும் - 2025






 












மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வும், பிரதேச சிறுவர் சபை அங்குரார்பண நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின்  ஆலோசனை மற்றும் தலைமையிலும்
உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

"உரிமைகளை பாதுகாப்போம் கடமைகளை செய்வோம்" வேலைத் திட்டத்தின் கீழ் கலைகள்  மற்றும் அரங்க விளையாட்டுகளின்  ஊடாக சிறுவர்களிடையே உள விருத்தியை மேம்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலமர்வானது பல்வேறு கட்டங்களின் ஊடாக முழு நாள் பயிற்சி செயலமர்வாக இடம்பெற்றது.

இதன் முதற்கட்டமாக களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி திரு.அ.உதயசூரியா அவர்களினால்  " பொறுப்புள்ள இளமைப் பருவத்தின் முக்கியத்துவம்" எனும் தலைப்பிலான விழிப்புணவு கருத்தரங்கு நிகழ்வானது இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து சிறுவர்களிடையே  திறன் விருத்தி செயற்பாடுகளினுடாக உளவிருத்தியை மேம்படுத்தும் வகையில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப. ராஜதிலகன் அவர்களினால்  சிறுவர்களிடையே பாடல் உருவாக்கம், கதை எழுதுதல், ஓவியம் வரைதல் மற்றும் விவாதம் முதலான செயற்பாடுகளுக்கான குழுமுறையிலான பயிற்சிகள் இடம்பெற்றதுடன், நிறைவில் சிறுவர்களின் மூலம் தாமாகவே  உருவாக்கப்பட்ட செயற்பாடுகள் ஆற்றுகை செய்யப்பட்டது.

இதன் போது உதவி மாவட்ட செயலாளர் கே. பிரணவன் அவர்கள் கலந்துகொண்டு இந்த செயற்பாடுகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வாக 2025-2027ம் ஆண்டுக்கான புதிய பிரதேச சிறுவர் சபை விருப்பு வாக்களிப்பு முறை மூலம்  தெரிவு செய்யப்பட்டதுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ம.புவிதரன் செ.சக்திநாயகம் ஆகியோரினால் சிறுவர் சபையில் அங்கத்துவம் பெறுவதனால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கடந்த கால சிறுவர் சபையின் செயற்பாடுகள் பற்றி கலந்து கொண்டவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது. இந்நிகழ்வில் 45 சிறுவர் கழகங்களில்  அங்கத்துவம் பெறும் சிறுவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ச.மனோகரன் அவர்களினால் சிறுவர்கள், இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை தடுத்தல், எதிர்கால சந்ததியினரை அதிலிருந்து பாதுகாத்து கொள்தல் எனும் தலைப்பில் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பி. ஜீவகுமார், சமூர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார்,
மற்றும் கல்லாறு வங்கி முகாமையாளர் உட்பட  பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், கலந்து கொண்ட சிறுவர்கள்அனைவருக்கும்  சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான செ. சக்திநாயகம் மற்றும் ம. புவிதரன் ஆகியோர் இணைந்து இந்த செயலமர்வினை ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.