போலியான காதல் உறவுகளை உருவாக்கி, இணைய மோசடி- போலீசார் எச்சரிக்கை

 


இணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் இன்னும் நாட்டில் நடைபெற்று வருகிறது.

திட்டமிட்டு பாரிய அளவில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மோசடிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் குழுக்களாக தங்கியிருந்து இணைவழி ஊடாக பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையர்களும் பல்வேறு இடங்களில் அவ்வப்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இணைய வங்கிப் பரிவர்த்தனைகளில் வழங்கப்படும் OTP அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் மற்றும் பல முக்கிய உத்திகள் மூலம் நிதி மோசடி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் ஒரு முறையாக பேஸ்புக், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நபர்களை வற்புறுத்தி பணத்தை முதலீடு செய்ய வைப்பதன் ஊடாக இந்த மோசடிகள் இடம்பெறுகின்றன.

இது தவிர, இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் மற்றொரு தந்திரம், சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கி, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு வகையில் பணத்தை வைப்பிலிடத் தூண்டுவதாகும்.

மேலும், சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் நடித்து பல்வேறு திட்டங்களுக்கு அழைப்பு விடுத்து பணம் பெறும் மோசடிகள் குறித்த தகவல்களும் இந்த நாட்களில் பதிவாகி வருகின்றன.

இவ்வாறான ஆட்கடத்தல்கள் தொடர்பில் எவ்வளவோ தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறான மோசடி குழுக்களுக்கு இரையாகி வருவது மேலும் புலனாகின்றது.