மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு செவ்வாய்கிழமை (25) அன்று 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..
இதனை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் இதில் பெண்களே அதிகளவில் பங்கு பெற்றிருந்தனர்.
பொதுமக்கள் மதுபான சாலைக்கு முன்னாள் நின்று சுலோகங்களை ஏந்தி கோஷங்களை
எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும் மதுபானசாலை தொடர்ந்தும்
திறந்தே காணப்படுகின்றது.அத்தோடு மதுபான சாலைக்கு மதுபானம் வாங்க வருபோரை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இதன்போது குறித்த மதுபான சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்தல் காலங்களில் தம்மை
தேடிவரும் அரசியல்வாதிகள் தமது போராட்ட களத்திற்கு வருகை தந்து
பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவில்லையெனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
அத்தோடு குறித்த இடத்தில் சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு
முனைந்த போதும் அவ்விடம் வந்த பொலிஸார் முரண்பாடுகள் ஏற்படாத வகைமில்
பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.
எனினும் குறித்த மதுபான சாலைக்கு முன்னாள் அமர்ந்து மக்கள் தமது எதிர்ப்பை
தொடர்ந்தும் வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மதுபான சாலையை
நிரந்தரமாக மூடும் வரை சுழற்சி முறையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.