இந்தியாவின் பிரதமராக 3 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் அந்த விஜயம் திடீரென பிற்போடப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற விழா கடந்த 9 ஆம்திகதி டில்லியில் இடம்பெற்ற போது அவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருத்ததுடன் நரேந்திர மோடியுடன் சந்திப்பையும் நடத்தியிருந்தார். இதன்போது தான் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என புதுடில்லி வட்டாரங்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக தகவல்களும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்த நிலையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இந்திய பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு பல் வேறு தரப்புகளுடனும் அதிரடி சந்திப்புக்கள் நடத்திய நிலையிலேயே தற்போது இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.