கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!


வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவம் நேற்று (19) ஆரம்பமானது.

கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாத்திரையை ஆரம்பித்த பக்தர்கள் திருத்தலத்தை நேற்று சென்றடைந்தனர்.

ஆடிவேல் உற்சவத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் கதிர்காம திருத்தலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நேற்று சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கதிர்காமத் திருத்தலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் நேற்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது. சர்வமத தலைவர்கள், கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர உள்ளிட்ட அதிகளவிலான பக்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கதிர்காம கந்தனின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவில் இந்த ஆண்டுக்கான முதலாவது திருவீதி உலா நேற்றிரவு நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.

கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ள நீர்வெட்டும் நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது.