வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை கண்டறிந்து என்ன செய்யப்போகிறோம் ?யுத்தம் செய்யப் போகிறோமா ?

 



இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏதுவான வேறு ஏதேனும் கிரகம் உள்ளதா? மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் மற்ற கிரகங்களில் உள்ளனவா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.

வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா? அல்லது பொய்யா? என்பது, இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது. ஆனால் ஏலியன்கள் இந்த பால்வெளி அண்டத்தில் வேறு எங்கேயாவது நம்மை விட அதி புத்திசாலிகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஏலியன்களின் செயல்பாடுகள் குறித்து இதுவரை பல ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் தங்களது ஆராய்ச்சி பயணத்தை தொடங்கி உள்ளனர். ஆனால் ஏலியன்கள் பற்றி இதுவரை எந்த உறுதியான தகவல்கள் வரவில்லை.

இந்த நிலையில் ஏலியன்கள் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு வழி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கர்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர் அக்ஷய் சுரேஷ் தெரிவித்து உள்ளார். ஏலியன்களை கண்டறிய சமிக்ஞைகள் தான் முதல் வழி என்றும் அந்த சமிக்ஞைகளை கொண்டு ஏலியன்களை அறியலாம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஏலியன்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, வானில் உள்ள பால்வெளி அண்டத்தில் பல நட்சத்திர குடும்பங்கள் உள்ளன. அந்த நட்சத்திர குடும்பங்களில் அதிக நியூட்ரான்களை, அலையாக வெளியேற்றும் சக்தி கொண்ட நட்சத்திரங்களும் உள்ளன.

அவை சக்திவாய்ந்த கதிர்களை வெளியிட்ட வண்ணமே இருக்கும். நட்சத்திர கூட்டத்தின் நடுவில், அலைகள் வெளிவருகிறது. இவை எப்.எம். அலைகளை விட 10 மடங்கு சிறியவை. நீண்ட தூரம் பயணிக்கும் அந்த அலைகள் அதிக காந்த தன்மை கொண்டதாக இருக்கிறது.

பால் வெளி அண்டத்தில் ஏலியன்கள் இருந்தால், அவை மற்ற கிரகத்திற்கு செய்தி சொல்ல முயற்சி செய்யும். அப்போது இது போன்ற அலைகளை வெளியிடும். இந்த அலைகளை கொண்டு ஆய்வு செய்வதின் மூலம் ஏலியன்கள் பால்வெளி உள்ளதா என்பதை கண்டறியலாம்.

ஆனால் ஏலியன்கள் குறித்து மறைந்த புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும்போது, வேற்றுக்கிரகவாசிகளைத் தேடி நாம் செய்தி அனுப்புவது அவ்வளவு நல்லதல்ல. நம் செயற்பாடுகளை கண்டுபிடித்து உலகத்திற்கு அவர்களால் வர முடிந்தது என்றால், அவர்கள் நம்மை விடத் தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன்னேறியவர்களாகவே இருப்பார்கள். அப்படியொரு கூட்டத்தை எதிர்த்து நிற்கும் அளவுக்கு எங்களிடம் தொழினுட்பம் வளரவில்லை. அப்படிச் செய்வது ஆபத்து தான் என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.