வருமான வரித் திணைக்கள அதிகாரி எனப் போலியாக நடித்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கொழும்பு கொம்பனித் தெரு காவல்
நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறை
அதிகாரிகளால் சந்தேகநபர் கல்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கல்கமுவவைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வருமான வரித் திணைக்கள
அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வருமான வரி செலுத்தும்
பல்வேறு நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.
பின்னர், தனது தனிப்பட்ட தேவைக்காக பணம்
கோரி, அந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுமாறு
மிரட்டியும், ஏமாற்றியும் பெற்றுள்ளார்.
விசாரணைகளின்போது, அவர் ஏற்கனவே இது
போன்ற நிதி மோசடிச் சம்பவங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்
கைது செய்யப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.





