(PayPal) பணப்பரிமாற்றச் சேவை இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அபிலாஷைகளை உலகளவில் அங்கீகரிக்கச் செய்துள்ள ஒரு மைல்கல்--பிரதமர் ஹரிணி அமரசூரிய-

 



இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் நீண்டகால இலக்குகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘பேபால்’ (PayPal) பணப்பரிமாற்றச் சேவை இலங்கையின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து தனது சேவைகளை ஆரம்பித்துள்ளமை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு, இது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அபிலாஷைகளை உலகளவில் அங்கீகரிக்கச் செய்துள்ள ஒரு மைல்கல் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டிற்கு சர்வதேச நிதித் தளங்களுடன் இணையும் வசதி என்பது ஒரு தெரிவாக அல்லாமல், காலத்தின் கட்டாயமாகவே இருந்து வந்தது. குறிப்பாக, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் (SMEs) சர்வதேச சந்தையுடன் இணைவதற்கு இருந்த மிகப்பெரிய தடையாக பாதுகாப்பான மற்றும் இலகுவான பணப்பரிமாற்ற வசதி காணப்பட்டது. பேபால் நிறுவனத்தின் வருகையானது, இந்த இடைவெளியை நிரப்புவதோடு மட்டுமல்லாமல், எமது நாட்டு உற்பத்திகளை உலகளாவிய நுகர்வோருக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் ஒரு நுழைவாயிலாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் ‘சுயாதீன பணியாளர்’ (Freelancers) மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது, இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. மென்பொருள் உருவாக்கம், கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் இணையவழி சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், தாம் வழங்கும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்வதில் நீண்டகாலமாகப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்கி வந்தனர். இனிவரும் காலங்களில், பேபால் சேவையின் ஊடாக அவர்கள் மிகவும் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான முறையில் தமது வருமானத்தை இலங்கைக்குக் கொண்டுவர முடியும். இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கும் நேரடிப் பங்களிப்பு வழங்கும்.
இலங்கையில் இந்தச் சேவையானது ஆரம்பகட்டமாக இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய மூன்று பிரதான வங்கிகளுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது. பேபால் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய பொது மேலாளர் நதியா சையத் இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த வங்கிக் கூட்டாண்மை மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் தடையற்ற முறையில் எல்லை கடந்த கொடுப்பனவுகளைப் (Cross-border payments) பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். வரும் வாரங்களில் தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் எவ்வாறு இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் என்பது குறித்த மேலதிக வழிகாட்டல்கள் அந்தந்த வங்கிகளூடாக வழங்கப்படும் என்பதுடன், எதிர்காலத்தில் ஏனைய வங்கிகளும் இந்தச் செயற்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளன.
இந்த முன்னெடுப்பானது வெறும் வர்த்தக ரீதியான முன்னேற்றம் மட்டுமல்லாது, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒரு முக்கிய அடியாகும். உலகளவில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் பாதுகாப்பற்ற பணப்பரிமாற்றங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், பேபால் போன்ற ஒரு நம்பகமான சர்வதேச தளம் இலங்கையுடன் இணைவது, சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இலங்கையின் மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும். பிரதமரின் கூற்றுப்படி, இது இலங்கையை ஒரு பின்தொடரும் நாடாக அல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை நிலைநாட்டக்கூடிய நாடாக மாற்றும் என்பதில் ஐயமில்லை