நாடு தழுவிய ரீதியில்
போக்குவரத்து குற்றங்களுக்காக இணையவழி அபராதம் செலுத்தும் முறைமையொன்றை
அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற
வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த
அவர், இந்த அமைப்பு தற்போது குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான
பகுதியில் மட்டுமே கைபேசி கட்டண செலுத்தல் முறைமையில் இயக்கப்படுவதாகக்
குறிப்பிட்டார்.
இலங்கை முழுவதும் உள்ள காவல்துறை
அதிகாரிகளுக்கு விரைவில் கைபேசிகள் வழங்கப்படும் எனவும் விரைவில் நாட்டில்
எங்கிருந்தும் அபராதம் செலுத்த முடியும் எனவும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும்
அபராதங்களைக் குறைப்பதற்கு ஆசனப்பட்டிகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது
உட்பட வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான
முயற்சிகளையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
இதேவேளை, உந்துருளி விபத்துகளால்
ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் குறைக்கும் முயற்சியில்,
தலைக்கவசங்களின் தரநிலைகளில் கடுமையான நடவடிக்கைகளை
அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முச்சக்கர வண்டிகளின்
பயணிகளின் எண்ணிக்கை தொடர்பிலும், தற்போதுள்ள சட்டங்கள் உரியமுறையில்
செயற்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித்துள்ளார்.