தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில், கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று (19) அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
ரமழான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் சிலிண்டர் வெடித்தது. இதில் அந்த குடியிருப்புக் கட்டடம் இடிந்து சரிந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கினர்.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.





