பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறை நாட்டில் உருவாக்கப்படும்- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க .

 


பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 
 
நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 
பொய்ப் பிரசாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 
 
அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று (09) இராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். 
 
அனர்த்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான திட்டங்களில் ஒன்றாக இந்த வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
 
அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, அதே இடத்தில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டது.