முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க அதிரடியாகக் கைது செய்யப்பட்டு அன்றையதினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின்னர் சுகயீனமடைந்த ரணில் அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எனினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருகிறது.
அவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது தொடர்பில் அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் வழக்குத் திகதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்க தெரிவிக்கையில்,
”மருத்துவர்களின்
ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” எனவும் அவருக்கு மேலும்
ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச்
சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.





