இலங்கைக்கான பயணத்தின்
போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர்
டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும்,
புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டுள்ளது.
BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகள் பேரவையின், சாட்சிய சேகரிப்பு முயற்சிகளின் கண்டுபிடிப்புகளை
உறுதிப்படுத்த, டர்க்கின் இந்த பயணம் உதவும் என்று, பிரித்தானியத் தமிழர்
பேரவை டர்க்குக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 7 தசாப்தங்களாக, தமிழர் மீதான
அட்டூழியக் குற்றங்களின் வடுக்கள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்களை மறைக்க
அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன.
அத்துடன், இலங்கையின் தமிழ் சமூகங்கள்
அரச அடக்குமுறை மற்றும் முறையான துஷ்பிரயோகங்களின் விளைவுகளைத் தொடர்ந்து
எதிர் நோக்கி வருவதாக, பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.
ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இலங்கைக்கான பயணத்தின் போது,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க்,
வடக்கு கிழக்கின் பல இடங்களுக்கும் சென்று, தமிழ் பொதுமக்கள், காணாமல்
போனவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ்
அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்திக்க
வேண்டும் என்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.
ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.