மதுபான பாட்டில்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தும் திட்டத் தினால் வருமானம் உயர்வு .

 


கடந்த மூன்று ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மதுபான பாட்டில்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தும் திட்டம் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களிலும் சரியான வரி வசூலை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டது. அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மதுபான போத்தலிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டது.

திட்டம் அறிமுகமானதையடுத்து வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. 2021-இல் இருந்ததை விட ரூ. 30 பில்லியன் அதிகரித்து, 2022-ஆம் ஆண்டு ரூ. 170 பில்லியன் வருமானம் ஈட்டப்பட்டது. தொடர்ந்து 2023-இல் ரூ. 178 பில்லியனாகவும், 2024-இல் ரூ. 226 பில்லியனாகவும் வருமானம் அதிகரித்தது.

2025 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்பது மாதங்களில், மதுவரித்திணைக்களம் ரூ. 190 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. இது அதே காலப்பகுதிக்கான அரசின் இலக்கான ரூ. 177 பில்லியனை ரூ. 13.4 பில்லியனால் மீறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமானம் இலக்கு ரூ. 242 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வருமானம் செயல்திறன் இலக்கின் 107 % ஐ மீறியதாகவும், 2024 உடன் ஒப்பிடும்போது 18% அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் மதுவரித்திணைக்கள ஆணையாளர் ஜெனரல் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில், சில மதுபான உற்பத்தியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டும் விதிமுறையை பின்பற்றவில்லை என்பதால், சுமார் 50% வரி வருமானம் இழப்பு ஏற்பட்டதாக கவலை எழுந்தது. இதனை அடுத்து  திணைக்களம் கடும் விசாரணைகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தியது. 

இந்த முயற்சி வரி வசூலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருட்களின் தரத்தை அதிகரிக்கவும், போலி அல்லது தரமற்ற மதுபானங்களை எளிதில் அடையாளம் காணவும் உதவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022 ஜனவரி 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தமாக வழங்கப்பட்டது. 

ஒப்பந்தத்தின் படி 1,000 ஸ்டிக்கர்கள் 5.99 அமெரிக்க டொலர் செலவில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்டிக்கரின் மதிப்பு சுமார் ரூ. 1.21 ஆகும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நாட்டில் உள்ள 70 உரிமம் பெற்ற மதுபான உற்பத்தியாளர்களையும், 18 இறக்குமதியாளர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. உற்பத்தியாளர்களின் தொழில்நுட்ப திறனைப் பொறுத்து Foolproof Stickers மற்றும் Digital Printing என இரண்டு வகையான பாதுகாப்பு முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஸ்டிக்கர் அமைப்புக்கான புதிய செயலி உருவாக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு (சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.