வரலாற்று
பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (20) வெள்ளிக்கிழமை காலை
5.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ஜயசேகர பூக்கம்பம் வெட்டி கானகப் பாதைக்கான கதவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
வரலாறு காணாத வகையில் இம்முறை சுமார் 4000 க்கு மேற்பட்ட அடியார்கள் முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
இந்து சமய கலாசார முறைப்படி மூன்றாவது தடவையாக
கழுகுமலைப் பத்து பாடி பிரதம குரு சிவ ஸ்ரீ க.
கு.சீதாராம் குருக்கள் பஞ்சாரத்தி காட்டியதும் கானகப்பாதைக் கதவு திறந்து வைக்கப்பட்டது.
இன்று
அதிகாலை 4.00 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவ ஸ்ரீ
க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார்..
காலை 5.30 மணியளவில் குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.
அவ்வமயம்
, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், கிழக்கு மாகாண
கலாசார பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன்,லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே.அதிசயராஜ்.பொத்துவில் உதவி பிரதேச
செயலாளர் கே.இராமக்குட்டி , முன்னாள் மாகாண கலாசார பணிப்பாளர்
ச.நவநீதன்மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜி, ஆலய வண்ணக்கர்
சுதுநிலமே திஸாநாயக்க , காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர்
கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இந்து சமய செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா
உள்ளிட்ட பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
யாழ்ப்பாணம்
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த சி.ஜெயராசா( ஜெயா வேல்சாமி)
தலைமையிலான 56 நாள் மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட 4 ஆயிரம்
அடியார்கள் கலந்து கொண்டார்கள்.
கதிர்காம காட்டுப் பாதை மொத்தம் 56 மைல்கள் ஆகும்.
உகந்தையிலிருந்து
ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு. 12
மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல்
தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல்
தூரத்தில் கதிர்காமம் மொத்தமாக காட்டுப்பாதை 56 மைல்களை உள்ளடக்கியது .
சுமார் 6 நாட்கள் இந்த காட்டுப் பயணத்தை அடியார்கள் மேற்கொள்வது வழமை.
நேற்று 20ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட காட்டுப் பாதை யூலை 04 ஆம் தேதி மூடப்படுகிறது.
கதிர்காம கொடியேற்றம் 26ஆம் திகதி நடைபெற இருக்கின்றது . யூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தம் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்காமப்
பாதயாத்திரை அகத்திய முனிவர் தொடக்கி அருணகிரியார் ஈறாகவும், யோகர் சுவாமி
முதற்கொண்டு சித்தானைக்குட்டி வரை எண்ணிறைந்த சித்தர் பெருமக்கள் இன்றுவரை
தம் பாதக் கமலங்களை பதித்து பவனி சென்ற பாதையில் வருடாவருடம் நாமும்
பயணிக்கின்றோம் என்று
"ஷேத்திராடனம்" எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
( உகந்தையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)










